இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட வேகமாகப் பரவும் புதிய திரிபு கொரோனா வைரஸ் தென்கொரியாவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
டிசம்பர் 22-ஆம் திகதி லண்டனில் இருந்து தென் கொரியாவுக்குள் நுழைந்த மூன்று பேருக்கு புதிய திரிவு வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் (KDCA) இன்று திங்கிழமை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கொரியாவில் மொத்தமாக 808 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்பத்தப்பட்டனர்.
தொற்று நோய் மீண்டும் வேகமாகப் பரவி வரும் நிலையில் தென் கொரிய அரசாங்கம் அதன் தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோகத் திட்டங்கள் குறித்து உள்நாட்டு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
2021 முதல் காலாண்டில் பரவலாக தடுப்பூசித் திட்டங்களை தொடங்கவுள்ளதாக தென்கொரிய அரசு முன்னர் அறிவித்தது. இந்நிலையில் இது குறித்த விமர்சனங்களை அடுத்து தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தில் மருத்துவத் தொழிலாளர்கள் மற்றும் வயதானவர்கள் தடுப்பூசிகளைப் பெறத் தொடங்குவார்கள். மேலும் பரந்தளவில் மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டங்களும் துரிதப்படுத்தப்படும் என தென்கொரிய ஜனாதிபதியின் பிரதிநிதி நோ யங்-மின் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
46 மில்லியன் மக்களுக்கு அல்லது அதன் மக்கள் தொகையில் 85% க்கும் அதிகமானவர்களுக்கு போடுவதற்கு தேவையாள அளவு தடுப்பூசிகளை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.
தென் கொரியாவின் மக்கள் தடுப்பூசிகளின் மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை (herd immunity) மற்ற நாடுகளை விட வேகமாக எட்டுவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக நோ யங்-மின் கூறினார்.
தென் கொரியாவில் இதுவரை மொத்தம் 57,680 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 819 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்