மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் இயற்கை அனர்த்தம் மற்றும் தற்போதைய கொரோனா தாக்கத்தின் காரணமாகவும் தமது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மிகவும் வறிய மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு நிவாரணப் பொதிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலிபன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
'எம் உறவுகளுக்கு கை கொடுப்போம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு 2500 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அமைதிபுரம் , தட்சனா மருதமடு, கீரி சுட்டான் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த முகாமைத்துவ பிரிவின் ஆலோசனைக்கு அமைவாகவும் மடு உதவி பிரதேசச் செயலாளர் அவர்களின் உறுதிப்படுத்தலுடனும் குறித்த நிவாரணப் பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிவாரணப் பணியின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலிபன், நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் நிரோஜன் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்களும் குறித்த கிராமங்களின் கிராம சேவையாளர்களும் இணைந்து குறித்த நிவாரணப் பணியினை மேற்கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்