இங்கிலாந்தில் இதுவரை இல்லாதவாறு ஒரே நாளில் நேற்று 41,385 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், நேற்று 357 கொரோனா மரணங்களும் நாட்டில் பதிவாகின.
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்குப் பின்னர் நாட்டில் அதிகரித்துவரும் தொற்று நோயாளர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. இதனால் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருவதாக சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது தொற்று நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட 20,426 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயின் முதல் அலையின் உச்சத்தின்போது தீவிர பாதிப்புக்களுடன் மருத்துவமனைகளில் 19,000 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அதனைவிட தற்போது மருத்துவமனைகளில் உள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்திலும் மருத்துவமனைச் சோ்க்கைகள் அதிகமாகி வருவதாக அப்பகுதிகளின் சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில் அங்கு தொற்று நோய் தீவிரமடைந்து வருவது தீவிர கவலைகளைத் தோற்றுவித்துள்ளது.
எனினும் தடுப்பூசிகளை விரைவுபடுத்துவதன் மூலமும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாகக் பேணுவதன் மூலமும் தொற்று நோயைக் கட்டப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என இங்கிலாந்து சுகாதாரத் துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து