ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனெகா கொரோனா தடுப்பூசியின் பொதுப் பாவனைக்கு இங்கிலாந்து இன்று அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து பைசர், மொடர்னா தடுப்பூசிகளைத் தொடர்ந்து மூன்றாவது தடுப்பூசியாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி ஜனவரி 4-ஆம் திகதி முதல் பொதுப் பயன்பாட்டக்கு வரும் என இங்கிலாந்து சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹான்காக் கூறினார்.
அஸ்ட்ரா ஜெனெகாவின் 100 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற இங்கிலாந்து முன்பதிவு செய்துள்ளது. இது இரண்டு தடுப்பூசிகள் வீதம் 50 மில்லியன் மக்களுக்கு போடுவதற்குப் போதுமானது.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பரிசேதனை 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் இடம்பெற்று வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தன்னார்வலர்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன.
ஏனைய தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி குறைந்த விலையில் சந்தைக்கு வரவுள்ளது. அத்துடன் இது இலகுவான பாவனைக்கு ஏற்றது.
முக்கியமாக இந்தத் தடுப்பூசியை சாதாரண குளிர்சாதன பெட்டியில் வைத்துப் பாதுகாக்கலாம். எனவே, இதனை விநியோகம் செய்வது மற்றும் சேமித்து வைப்பது எளிதானது என்பதால் இது பரந்தளவு பாவனைக்கு வரும் என நம்பப்படுகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து