ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் ஒருவர் புது வருட தினமான நேற்று வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு மாதங்களில் இவருடன் 5 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சதா-இ-கோர் (Voice of Ghor) வானொலி நிலையத்தின் தலைமை ஆசிரியர் பிஸ்மல்லா அடெல் ஐமாக் (28) என்ற ஊடகவியலாளரே நேற்று வெள்ளிக்கிழமை கோரின் தலைநகரான ஃபிரோஸ் கோ நகரத்திற்கு அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இவரது படுகொலைக்கு எந்தவொரு அயுதக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
துரதிர்ஷ்டவசமாக ஃபிரோஸ் கோவில் வைத்து சதா-இ கோர் வானொலியின் தலைமை ஆசிரியர் பிஸ்மல்லா அடெல் ஐமாக் இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டார். அவர் 2015 முதல் சதா-இ-கோர் வானொலியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் என கோரின் துணை ஆளுநர் ஹபீபுல்லா ரத்மனேஷ் கூறினார்.
இந்தக் கொலையைக் கண்டித்துள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, கருத்துத் சுதந்திரத்தை உறுதி செய்யவும் மேம்படுத்தவும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.
இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதன் மூலம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களின் நியாயமான குரல்களை தலிபான் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களால் மௌனிக்கச் செய்ய முடியாது எனவும் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிவில் சமூக ஆர்வலர் ஒருவரும் ஆப்கானில் நேற்று வெள்ளிக்கிழமை இனம்தெரியாத ஆயுதக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் அரசாங்கத்திற்கும் தலிபானுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றபோதும் அங்கு தொடர்ந்து வன்முறை அதிகரித்து வருகின்றன.
ஊடகவியலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் அங்கு இலக்குவைத்து தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருகின்றர்.
எனினும் ஊடகவியலாளர்கள் கொலைகளுடன் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று அண்மையில் தலிபான்கள் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.