கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக 2020-ஆம் ஆண்டில் விமான சேவைகள் முடங்கியிருந்தபோதும் விமான விபத்துக்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2019-ஐ விட 2020-இல் அதிகரித்துள்ளன.
2020-ஆம் ஆண்டில் உலகளவில் பயணிகள் விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 299 பேர் கொல்லப்பட்டதாக டச்சு விமான சேவை ஆலோசனை குழுமமான To70 தெரிவித்துள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கை 2019-இல் 257 ஆக இருந்தது.
கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக விமான சேவைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தபோதும் ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டு உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு வர்த்தக விமான சேவைகள் 42% குறைந்துவிட்டதாக சா்வதேச விமாக சேவைகள் கண்காணிப்பு தளமான ஃப்ளைட்ராடார் தெரிவித்துள்ளது.
இதனால் விமான சேவைத் துறைகளில் ஏற்பட்டுள்ள இழப்புக்களை ஈடுகட்ட பல ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஈரானிய படைகளால் உக்ரைன் இன்டர்நஷனல் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 176 பேர் உயிரிழந்தனர். இதுவே கடந்த ஆண்டு அதிகளவானவர்கள் உயிரிழந்த விமான விபத்தாகும்.
இந்த விமான விபத்தில் கொல்லப்பட்ட அனைவரது குடும்பங்களுக்கும் 150,000 டொலர் இழப்பீடு வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
அத்துடன் கராச்சி நகரில் மே மாதம் பாகிஸ்தான் இன்டர்நஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 98 பேர் உயிரிழந்தனர்.
இதேவேளை, 2019-இல் மொத்தம் 86 விமான விபத்துக்கள் இடம்பெற்றபோதும் 2020-இல் இவை 40-ஆகக் குறைந்துள்ளன. அந்த 40 விபத்துக்களில் ஐந்து மட்டுமே ஆபத்தானவை எனவும் To70 தெரிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் விமான சேவைத் துறையின் பாதுகாப்பான ஆண்டாக 2017 அமைந்திருந்தது. அந்த ஆண்டில் எந்தவொரு அபாயகரமான பயணிகள் விமான விபத்துக்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்