ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் மேம்படுத்தி வரும் கோவிஷீல்ட் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை கட்டுப்பாடுகளுடன் வழங்கலாம் என இந்திய மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்திருந்த நிலையில் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக ஏற்கனவே 50 மில்லியனுக்கும் அதிகமான தமது தடுப்பூசி மருந்து தயாரிப்பை சீரம் நிறுவனம் தயாராக வைத்துள்ளது.
இதேவேளை, இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவேக்ஸின்' தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கும் இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு நேற்று சனிக்கிழமை பரிந்துரைத்துள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு கூட்டத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவேக்ஸின்' தடுப்பூசியை பல்வேறு நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிப்பதற்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தயாரிப்பான கோவேக்ஸின் தடுப்பூசியை ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவையுடன் இணைந்து தயாரித்துள்ளது.
எனினும், இந்த இரண்டு தடுப்பூசிகள் தொடர்பான பரிந்துரைகள் மீது இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் முடிவெடுத்து, இறுதி அனுமதி வழங்கிய பிறகே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொது பயன்பாட்டுக்கு தடுப்பூசி மருந்துகளை விநியோகம் செய்வது சாத்தியமாகும்.
இந்தியாவில் இந்த தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்ய பரிந்துரை செய்யப்படுவது முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த அனுமதி இருந்தால்தான் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். மேலும், சீரம் நிறுவனத்திடம் தடுப்பூசி வாங்க ஒப்பந்தம் செய்துள்ள பிற வெளிநாடுகளுக்கும் அதை விநியோகிக்க சட்ட அனுமதி கிடைக்கும்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா