Friday 19th of April 2024 06:54:43 AM GMT

LANGUAGE - TAMIL
-
தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா சிகிச்சைக்கு அனுமதி?!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதி?!


கொழும்பில் உள்ள லங்கா தனியார் மருத்துவமனையில் (Lanka Hospitals) கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கோரி லங்கா மருத்துவமனை மற்றும் நவலோக மருத்துவமனை ஆகியன விண்ணப்பித்திருந்தன.

இதனையடுத்து இந்த இரு வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு அதிகாரிகள் அண்மையில் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள், தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதிகள் குறித்து ஆராய்ந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெல குணவர்தன தெரிவித்தார்.

இதனையடுத்து கொழும்பு நரஹன்பிட்டியில் உள்ள லங்கா மருத்துவமனை கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் திருப்திகரமாக உள்ளதாக சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகத் தெரியவருகிறது. எனினும் வைத்தியசாலையில் தற்போதுள்ள அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அவா்கள் கூறியுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செயல்படுத்தி அது குறித்து முன்மொழிவை சமர்ப்பித்தால் கொரோனா சிகிச்சை மையமாக செயற்பட லங்கா மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

இதற்கான அனுமதி வழங்கப்பட்டால் நோயாளிகளை லங்கா மருத்துவமனைகளுக்கு அனுப்பும் திட்டம் சுகாதார சேவைகள் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும். அதே நேரத்தில் நோயாளிகளை முகாமைத்துவம் செய்தல், தீவிர சிகிச்சை பிரிவு கவனிப்பு என்பன லங்கா வைத்தியசாலையால் முன்னெடுக்கப்படும்.

அங்கு செல்ல விரும்புவோர் சிகிச்சைகளுக்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்க வேண்டியிருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசெல குணவர்தன தெரிவித்தார்.

இதற்கிடையில், கொழும்பு - நவலோகா மருத்துவமனை தற்போது மக்கள் அதிகம் உள்ள பரபரப்பான பகுதியில் அமைந்துள்ளதால் கொரோனா சிகிச்சை மையமாகச் செயற்பட ஏற்றது அல்ல என்ற முடிவுக்கு சுகாதார அமைச்சு அதிகாரிகள் வந்துள்ளனர்.

எனினும் வேறொரு பொருத்தமான இடத்தை கொரோனா சிகிச்சை மையமாக அடையாளம் காட்டினால் அனுமதி குறித்துப் பரிசீலிக்கப்படும் என சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE