இந்திய குடியரசு தின விழாவில் இம்முறை தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் திடீரென தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழா தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்திய குடியரசு தினம் வருடந்தோரும் ஜனவரி -26-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளின் தலைவர்களில் ஒருவர் தலைமை விருந்தினராக அழைக்கப்படுவது வழமை.
இவ்வாண்டு தலைமை விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் திடீரென தனது பயணத்தை இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளார்.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமடைந்துள்ளது. அத்துடன், மிக வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் அங்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நாடு முழு பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதனால் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ள முடியாமை காரணமாகவே போரிஸ் ஜோன்சன் தனது இந்தியப் பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகியுள்ள நிலையில் தனது பயணத்தை இரத்து செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து