கொரோனா வைரஸ் தொற்று நோயின் தோற்றம் குறித்து ஆராய்வதற்காக வல்லுநர்கள் குழுவை சீனாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு அனுமதி வழங்காமல் சீன அரசு இழுத்தடித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
விசாரணைகளுக்காக சீனா செல்ல சர்வதேச அறிவியல் குழுவின் உறுப்பினர்கள் தயாராக உள்ளனர். எனினும் அவா்களுக்கான அனுமதியை சீனா இன்னமும் வழங்கவில்லை என ஜெனீவாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கெப்ரேயஸ் குறிப்பிட்டார்.
சீனாவின் இந்த இழுத்தடிப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன் எனவும் அவா் கூறினார்.
சீனாவில் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆராய்ந்து அறிவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம் எனவும் கெப்ரேயஸ் குறிப்பிட்டார்.
சீனாவில் குறிப்பாக வுஹான் நகரில் இடம்பெறவுள்ள இந்த ஆய்வுக்காக செல்வதற்கு சர்வதேச நாடுகள் பலவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வல்லுநர்கள் தயாராக உள்ளனர்.
செவ்வாய்க்கிழமை வல்லுநர்கள் குழுவின் சீன பயணத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த போதும் விசா அனுமதி உட்பட தேவையான ஒப்புதல்கள் வழங்கமால் சீனா இழுத்தடித்து வருகிறது.
ஏற்கனவே, சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவ சீனாவின் பொறுப்பற்ற போக்கே காரணம் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
சீனா தொற்று நோய் தொடர்பான தகவல்களை தொடர்ந்தும் மறைத்து வருவதாகவும் இந்நாடுகள் விசனம் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் சர்வதேச வல்லுநர் குழுக்களுக்கும் அனுமதி வழங்காமல் சீனா தொடர்ந்து இழுத்தடித்து வருவது அந்நாட்டின் மீதான விமர்சனங்கள் அதிகரிக்க ஏதுவான மற்றொரு காரணியாக மாறியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா