மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராமத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 179 நபர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று புதன் கிழமை(6) மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலினை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) செவ்வாய்க்கிழமை(5) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது மன்னார் மாவட்டத்தில் எருக்கலம் பிட்டி கிராமத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து செயல்பட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து சுகாதார அதிகாரிகளும் எருக்கலம் பிட்டி கிராமத்திற்குள் விஜயம் செய்து குறித்த கிராமத்தை சுய தனிமைப்படுத்தி மாலை 4.30 மணி வரை குறித்த கிராமத்தில் 200 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதே வேளை மன்னார் நகரில் நேற்று புதன் கிழமை மதியம் சுமார் 200 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் இரண்டு தினங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனை தொடர்ந்தே மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.மேலும் எருக்கலம் பிட்டி கிராமத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 179 நபர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான பீ.சி.ஆர்.பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. குறித்த விடையம் தொடர்பாக நேற்று புதன் கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், சுகாதார திணைக்களம் மற்றும் முப்படையினரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்தும் பரவல் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடையங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மன்னார்