அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் புகுந்து ட்ரட்ப் ஆதரவாளர்கள் நடத்திய மோசமான தாக்குதல்களை அடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் வொஷிங்டன் டிசி-யில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தலைநகரில் 2,700 தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு ட்ரம்ப் ஆதரவு கலவரக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணி ஜோ பைடனின் வெற்றியை உத்தியோகபூா்வமாக அறிவிக்கும் பணியில் அமெரிக்க காங்கிரஸ் ஈடுபட்டிருந்த நிலையில் நாடாளுமன்றக் கட்டத்துக்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறையை அடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டபோதும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து இடம்பெறும் என நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் நான்சி பெலோசி தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்றத்துக்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் ஏற்பட்ட குழப்பங்களில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். வன்முறையில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். 5 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கப்பிட்டல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் குவிந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் அங்கு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தாக்குதலில் தப்ப நாடாளுமன்றக் கட்டத்துக்கு சிதறி ஓடினர்.
தாக்குதலில் நாடாளுமன்ற அவையின் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன.
அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில் மக்களால் நேரடியான தோ்தல் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தொடர்ந்து தோ்தல் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் வாக்களித்து ஜனாதிபதியைத் தெரிவு செய்வார்கள்.
இந்நிலையில் மாகாணங்களின் தோ்தல் சபை உறுப்பினர்கள் வாக்களித்து தமது வாக்குகளை சீலிட்ட கவர்களில் வைத்து கடந்த டிசம்பர் 14-ஆம் திகதி அனுப்பிவைத்தனர்.
அந்த வாக்குகள் புராதன மகோகனி மரப்பெட்டிகளில் வைத்து கப்பிட்டல் கட்டடத்துக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
அந்த வாக்குகளை எண்ணி முடித்து பைடனின் வெற்றியை அங்கீகரித்து நாடாளுமன்றம் சான்றிதழ் அளிக்கவேண்டும் என்ற நிலையில் வாக்குகளை எண்ணும் பணி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோதே ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டத்துக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும் இந்த தாக்குதலில் வாக்குச் சீட்டுகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.