அமெரிக்க நாடாளுமன்ற கட்டத்துக்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை அண்டை நாடான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அவா்கள் தெரிவித்துள்ளனர்.
எங்கள் நெருங்கிய கூட்டாளியும் அண்டை நாடுமான அமெரிக்காவின் நாடாளுமன்றத்துக்குள் இடம்பெற்ற வன்முறை ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறை குறித்த செய்தியறிந்து கனேடியர்கள் மிகுந்த மன உளைச்சலுடனும் வருத்தத்துடனும் உள்ளனர்.
மக்களின் விருப்பத்தை மீறி முன்னெடுக்கப்படும் வன்முறைகள் ஒருபோதும் வெற்றி பெறாது. அமெரிக்காவில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அது உறுதிப்படுத்தப்படும் என நம்புகிறேன் எனவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டத்துக்குள் புகுந்து நடத்திய தாக்குதல் அமெரிக்காவின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அவமானம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிகார மாற்றம் அமைதியாகவும் சட்டம்-ஒழுங்குக்குக் கட்டுப்பட்டதாகவும் இடம்பெற வேண்டியது அவசியம் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மேலும் பல உலக நாடுகளின் தலைவர்களும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறையைக் கண்டித்துள்ளனர்.