விடுமுறைக் காலங்களில் ரொரண்டோவில் வீட்டுக்கு வெளியே குடும்ப உறுப்பினர்கள் தவிர்ந்தவர்களுடன் அதிகளவானவர்கள் ஒன்றுகூடியதால் கொரோனா தொற்று நோய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நகரின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை ரொரண்டோ நகர மண்டபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மத்தியில் ரொராண்டோ பொது சுகாதார நிறுவனம் நடத்திய கணித்துக் கணிப்பில் பதிலளித்தவர்களின் 32 வீதம் பேர் டிசம்பர் 22 மற்றும் ஜனவரி 4-க்கு இடையில் தங்கள் வீடுகளுக்கு வெளியே உள்ளவர்களுடன் ஒன்றுகூடியதாக ஒப்புக் கொண்டதாக டாக்டர் எலைன் டி வில்லா சுட்டிக்காட்டினார்.
அத்துடன், விடுமுறைக் காலத்தில் அதிகளவானவர்கள் ஒன்றுகூடியதால் அடுத்த சில நாட்கள் மற்றும் வாரங்களில் தொற்று நோயாளர் தொகையில் மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்தார்.
விடுமுறை காலத்தில் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்க்குமாறும், குடும்ப உறுப்பினர்களை தவிர வீட்டுக்கு வெளியே உள்ளவர்களுடன் ஒன்றுகூட வேண்டாம் எனவும் பொது சுகாதார அதிகாரிகள் பல முறை எச்சரித்தபோதும் பல ரொரண்டோ நகர வாசிகள் அதற்குச் செவிசாய்க்கவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
ரொரண்டோ நகரப் பகுதிகளில் மருத்துவமனைகளின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்கனவே 87 வீதம் நிரம்பியுள்ளன. இதனால் மருத்துவமனைகள் கடும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் தொற்று நோயாளர் தொகை மேலும் அதிகரிப்பது மருத்துவமனைகள் அவற்றின் திறனை இழக்க வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ரொரண்டோவில் இள வயதினர் மத்தியில் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருவது குறித்து டாக்டர் எலைன் டி வில்லா கவலை வெளியிட்டார்.
நேற்று புதன்கிழமை ரொரண்டோவில் பதிவான 837 புதிய தொற்று நோயாளர்களில் 181 பேர் 20 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
ஒன்ராறியோவில் சமீபத்திய வாரங்களில் கோவிட் நோய்த்தொற்று நோயாளர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துவருகிறது. புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர்களுடன் ஒன்ராறியோவில் தொற்று நோயாளர் எண்ணிக்கை 200,000 ஐ தாண்டியது.
இந்நிலையில் தொற்று நோய் மேலும் பரவுவதைத் தடுக்க ஊடரங்கு உள்ளிட்டமேலதிக கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் தயாராக இருப்பதாக ரொரண்மோ மேயர் ஜோன் டோரி நேற்று புதன்கிழமை கூறினார்.
பொது சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்தால் ஊடரங்கை அமுல் செய்யத் தயங்கப்போவதில்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.
ஏற்கனவே கியூபெக் மாகாணத்தில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜோன் டோரி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா