ஒன்ராறியோவில் ஒரு நாளில் இதுவரை பதிவாகாத அளவு அதிக கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டனர்.
நேற்று மொத்தம் 3,519 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், மாகாணத்தில் 89 கொரோனா மரணங்களும் பதிவானதாக மாகாண சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர் .
ஒன்ராறியோவில் கடந்த ஏப்ரல்-30 ஆம் திகதி தொற்று நோய் முதல் அலையின் போது ஒரு நாளில் 86 கொரோனா மரணங்கள் பதிவானதே இதுவரை ஒரு நாளில் பதிவான அதிகபட்ச மரணங்களாக இருந்தன.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவு நேற்று அதிக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை உயிரிழந்தவர்களில் குறைந்தது 43 பேர் மாகாணத்தில் உள்ள முதியோர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களாவர்.
இதேவேளை, புதிய மரணங்களுடன் மாகாணத்தில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 4,856 ஆக அதிகரித்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்த 4,856 பேரில் 3,347 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். 1,299 பேர் 60 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள். 187 போர் 40 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
அத்துடன், 20 முதல் 39 வயதுக்குட்பட்ட இருபத்தொரு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளனர்.
ஒன்ராறியோவில் நேற்று பதிவான 3,519 புதிய தொற்று நோயாளர்களுடன் தொடர்ச்சியாக நான்காவது நாளாக 3,100-க்கும் மேற்பட்ட தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாகாணத்தின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அண்மைக் காலங்களில் 60 வயதிற்கு உட்பட்டவர்களிடையே அதிகளவில் தொற்று நோய் பரவி வருகிறது.
வியாழக்கிழமை பதிவான 3,519 புதிய தொற்று நோயாளர்களில் 2,340 பேர் 20 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களாவர்.
60 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களில் 514 பேரும் 80 வயதுக்கு மேற்பட்ட 208 பேரும் நேற்று தொற்றுக்குள்ளானவர்களில் அடங்குகின்றனர்.
20 வயதிற்குட்பட்ட 448 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் தொற்று நோயின் தீவிரத்துடன் 1,472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றது. இவா்களில் 363 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். வென்டிலேட்டரின் உதவியுடன் 242 பேர் சுவாசித்து வருகின்றனர்.
நேற்று வியாழக்கிழமை ரொரண்டோவில் அதிகளவாக 892 புதிய தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன் பீல் பிராந்தியத்தில் -568, யோர்க் பிராந்தியத்தில் - 457, விண்ட்சர்-எசெக்ஸில் - 208, வாட்டர்லூ பிராந்தியத்தில் -175, டர்ஹாம் பிராந்தியத்தில் - 174, ஒட்டாவாவில் - 164, மிடில்செக்ஸ்-லண்டனில் - 115 மற்றும் நயாகராவில் 112 பேருக்கு தொற்று உறுதியானது.
மேலும் ஹால்டன் பிராந்தியத்தில் - 95, சிம்கோ-முஸ்கோகாவில் -78 மற்றும் வெலிங்டன்-டஃபெரின்-குயல்ஃப் பகுதியில் 90 பேருக்கும் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது.
மாகாணத்தில் நேற்று மொத்தம் 65,700 கோரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இவற்றில் நேர்மறை வீதம் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோவில் டிசம்பர் 26 முதல் மாகாணம் தழுவிய சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமூக முடக்கல் நடவடிக்கைகள் ஜனவரி 9 ஆம் திகதி வடக்கு ஒன்ராறியோவிலும், ஜனவரி 23 -ஆம் திகதி தெற்கு ஒன்ராறியோவிலும் முடிவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா