இணையத்தளங்கள் ஊடாக விற்பனைக்கு வரும் அல்லது அங்கீரிக்கப்படாத மூலங்களின் ஊடாக விற்கப்படும் கோவிட்19 தடுப்பூசிகளை வாங்க வேண்டாம் என கனேடியர்களுக்கு ஹெல்த் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு விற்பனைக்கு வரும் கோவிட்19 தடுப்பூசிகள் போலியானவையாக இருக்கலாம். இவற்றால் கடுமையான உடல்நல பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இன்டர்போலில் இருந்து உலகெங்கிலும் உள்ள சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்களுக்கு போலியான தடுப்பூசிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் ஹெல்த் கனடா குறிப்பிட்டுள்ளது.
கனேடியர்கள் இந்த போலியான தடுப்பூசிகளை வாங்குவது அல்லது பயன்படுத்துவது குறித்து ஹெல்த் கனடா இதுவரை அறியவில்லை. எனினும் இது குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு மருந்து அல்லது தடுப்பூசியையும் கனடாவில் சட்டப்பூர்வமாக விற்பனை செய்வதற்கு முன்னர் அதன் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரத்தை ஹெல்த் கனடா மதிப்பீடு செய்கிறது.
இந்நிலையில் பாதுகாப்பான செயல் திறன் கொண்ட தடுப்பூசிகள் கனடாவால் அங்கீகரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவை விரைவில் அனைத்து கனேடியர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் எனவே, இணையங்கள், அல்லது அங்கீகரிக்கப்படாத முகவர்கள் ஊடாக தடுப்பூசிகளை வாங்க முயற்சிக்க வேண்டாம் என ஹெல்த் கனடா தகவல் தொடர்பு மற்றும் பொது விவகாரக் கிளையின் ஊடக தொடர்பு அதிகாரி ஜெஃப்ரி லெகால்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா