ஒன்ராறியோவில் விடுமுறைக்காக மூடப்பட்ட பாடசாலைகள் திட்டமிட்டவாறு திங்கட்கிழமை திறக்கப்படாதென மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
மாகாணத்தில் தொற்று நோய் மிகத் தீவிரமாகியுள்ள நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் தெற்குப் பகுதியில் (சட்பரிக்கு தெற்கே) ஆரம்ப பாடசாலைகள் ஜனவரி -25 வரை மூடப்படும். இங்கு ஏற்கனவே பாடசாலைகளைத் திறக்கத் தீா்மானிக்கப்பட்ட காலத்தை விட இரு வாரங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்காக ஜனவரி 11 ஆம் திகதி வடக்கு ஒன்ராறியோவில் பாடசாலைகள் மீண்டும் தொடங்கும். உயர்தர மாணவர்கள் ஜனவரி 25 ஆம் திகதி வகுப்பிற்குத் திரும்ப உள்ளனர்.
இதேவேளை, வடக்கு ஒன்ராறியோவில் சமூக முடக்கல் ஜனவரி 25 வரை நீடிக்கப்படும் எனவும் மாகாண அரசு அறிவித்துள்ளது.
இது மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட சமூக முடக்கல் காலப்பகுதியோடு ஒத்ததாகும்.
மாகாணத்தில் பொது சுகாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் மற்றும் அனைத்து ஒன்ராறியர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது எங்கள் முன்னுரிமை என இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
எங்களது இந்த நடவடிக்கைகள் கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை இரவு சுகாதார அதிகாரிகளிடம் இருந்து எனக்குக் கிடைத்த தரவுகள் சிறுவர்களிடையே ஆபத்தான வகையில் தொற்று நோய் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
விடுமுறை நாட்களில் வீடுகளுக்கு வெளியே அதிகளவில் மக்கள் ஒன்றுகூடியதன் விளைவாக சிறுவர்கள் மத்தியில் அதிகளவு தொற்று நோய் பரவி வருகிறது எனவும் டக் போர்ட் குற்றஞ்சாட்டினார்.
ஒன்ராறியோவில் ஒரு நாளில் இதுவரை பதிவாகாத அளவு அதிக கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டனர்.
நேற்று மொத்தம் 3,519 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், மாகாணத்தில் 89 கொரோனா மரணங்களும் பதிவானதாக மாகாண சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில் பாடசாலைளின் விடுமுறைக் காலத்தை நீடித்து டக் போர்ட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.