வவுனியா நகரில் வர்த்தக நிலையம் வைத்திருக்கும் 204 பேருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 54 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பட்டாணிச்சூரில் 07 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வவுனியா நகரில் பல விற்பனை நிலையங்களை நிர்வகித்தல் மற்றும் பணியாற்றுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதால் வவுனியா நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன 204 பேருக்கு நேற்று பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன.
அவை தொடர்பிலான பரிசோதனைகள் கொழும்பில் இடம்பெற்றிருந்தன. அங்கிருந்து இன்று முற்பகல் கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலேயே 54 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இதேவேளை,
இந்நிலையில் வவுனியா முடக்கப்படுமா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த கேதீஸ்வரன்,
சில மணி நேரத்தின் முன்பாகவே குறித்த முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அது தொடர்பிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருகின்றன. இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
வவுனியா நகர் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்ற பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா