அமெரிக்க நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்ட நிலையில் இந்த வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று ட்ரம்ப் அமைச்சரவையிலிருந்து கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்களில் செயலாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்றத்துக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரியும் இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். எதிர்வரும் 20-ஆம் திகதி அவர் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றளிக்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்றக் கட்டத்துக்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்தே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று ட்ரம்ப் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சின் செயலாளராக இருந்த எலானி சாவோ, கல்வி அமைச்சின் செயலாளரான பெஸ்டி தேவாஸ் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரியும் இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன், ட்ரம்பின் அமைச்சரவையில் இருந்து மேலும் பலர் பதவி விலக தீா்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.