வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின்போது 276 பேருக்கு மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏனைய ஆசிரியர்கள், அதிபர்களுக்கு பிறிதொரு தினத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி. திலீபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கு புளியங்குளம் இந்துக்கல்லூரியில் கடந்த இருநாட்களாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின்போது நேற்று முன்தினம் 34 பேருக்கும் நேற்று 242 ஆசிரியர்கள் அதிபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டவர்களும் ஏனைய மேற்கொள்ளத் தவறியவர்களும் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு பாடசாலைக்கு வருகை தரலாம் எனினும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளாதவர்களுக்கு பிறிதொரு தினத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார் .வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வர்த்தகர்கள் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வவுனியா நகரம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா