முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு தமிழகத்தின் முதலமைச்சர், துணைமுதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், கட்சிகளின் தலைவர்கள் கண்டனக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போரில் இரக்கமின்றிக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுதூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்திபேரதிர்ச்சி அளிக்கிறது.
உலகத் தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதகச் செயலுக்கும் அதற்குத் துணை போன யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம்
இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பல ஏற்கனவே சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தற்போது யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டுள்ளது, மிகுந்த கவலைக்கும், கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று திரும்பியவுடன், இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்திருப்பதை, பிரதமர் மோடி அவர்கள் கருத்தில் கொண்டு, கண்டனம் தெரிவித்திட முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்!
மதிமுக தலைவர் வை.கோ
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து ஜனவரி 11ஆம் திகதி போராட்டம் நடத்தப்படும்.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மதிமுகவினர் பங்கேற்குமாறு அழைக்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்
(விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட்)