சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தோற்றம் குறித்து ஆராய்வதற்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர்கள் 10 பேர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் 14 ஆம் திகதி சீனாவுக்கு வரவுள்ளதாக சீன அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளனர்.
நிபுணர் குழுவை சீனாவுக்கு அனுப்ப உலக சுகாதார அமைப்பு நீண்ட நாட்களாக முயற்சியில் ஈடுபட்டுவருகின்றபோதும் இதற்கு சீனா தொடர்ந்து அனுமதிக்காமல் இழுத்தடித்து வந்தது. இதனால் இந்தக் குழுவின் சீனப் பயணம் தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்நிலையில் நிபுணர் குழுவின் வருகையை தாமதப்படுத்துவதன் மூலம் உண்மைகளை மூடி மறைக்க சீனா முயல்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறான நிலையிலேயே கடும் இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனா வரும் நிபுணர் குழுவினர் சீனாவின் கொரோனா தொற்று மையப் பகுதியான வுஹான் நகரிலும் பிற பகுதிகளிலும் ஆய்வில் ஈடுபடவுள்ளனர். அத்துடன், சீன தொற்று நோய் நிபுணர்களையும் அவா்கள் சந்தித்துக் கருத்தறியவுள்ளனர்.