பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதை விட மற்றொரு புதிய திரிவு கொரோனா வைரஸ் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
40 வயதான ஆண், 30 வயதான பெண் மற்றும் இரண்டு பதின்ம வயதினிடையே விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இந்த புதிய திரிவு வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
ஜப்பானில் கண்டறியப்பட்ட இந்த புதிய திரிவு குறித்து உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச சுகாதார நிபுணர்களுடன் இணைந்து ஆராய்ந்து வருவதாக ஜப்பான் கூறியுள்ளது.
அதேவேளை, ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ள புதிய திரிவு கொரோனா வைரஸ் தடுப்பூசித் திறனைப் பாதிக்குமா? என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய வைரஸ் திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நபர்களிடம் தொற்று நோயின் கடினமான அறிகுறிகள் காணப்படவில்லை. புதிய திரிபு தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் சுவாசிக்க கடினமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு பெண்ணுக்கு லேசான தலைவலி காணப்பட்டது. இன்னொரு பதின்ம வயது இளைஞனுக்கு காய்ச்சல் இருந்தது. மற்றொருவரிடம் எந்தவிதமான அறிகுறிகளும் காணப்படவில்லை எனவும் ஜப்பானிய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் பரவிவரும் கொரோனா வைரஸ் திரிபுடன் தொடர்புடைய 30 நோயாளிகள் ஜப்பானில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த திரிபு வேகமாக பரவுவதாக நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, ஜப்பானில் தொற்று நோய் அதிகரித்துவரும் நிலையில் தலைநகர் டோக்கியோவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜப்பானில் உணவகங்கள், பார்களை இரவு 8 மணியுடன் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஜப்பானிய அரசின் இந்த நடவடிக்கை போதாது என சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நாட்டில் ரயில் நிலையங்கள் மற்றும் உணவகங்கள் இரவு-பகலில் இன்னும் நிரம்பிக் காணப்படுவதாகவும் அவா்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜப்பானில் இதுவரை 280,000 -க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், 4,000 –க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்