போர்த்துக்கல் ஜனாதிபதி மார்சிலோ ரெபேசோ டிசோசா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளார்.
72 வயதான ஜனாதிபதி ரெபேசோ டிசோசா எதிர்வரும் 24-ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தோ்தலில் இரண்டாவது தடவையாகப் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் தோ்தலுக்கு இரு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதி ரெபேசோ டிசோசா நலமாக உள்ளார். அவருக்கு இதுவரை எந்த அறிகுறிகளும் வெளிப்படவில்லை என அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை போர்த்துக்கல்லில் அறிவிக்கப்படவிருந்த சமூக முடக்கல் குறித்து நேற்று நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். எனினும் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் அந்தக் கலந்துரையாடலை இரத்துச் செய்தார். அத்துடன் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதையும் அவர் தவிர்த்ததாக ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.
பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ஆகியோருக்கு தனது நிலைமை குறித்து ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துவிட்டதாக ஜனாதிபதியின் உத்தியோகபூா்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஜனாதிபதி ரெபேசோ டிசோசா தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார்.
ஜனவரி 6-ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் ஜனாதிபதி ரெபேசோ டிசோசாவுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.