ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் அவசர காலத் திட்டத்தின் கீழ் மாகாண தொழிலாளர்கள் 10 நாட்கள் சம்பளத்துடன் கூடிய சுகயீன விடுமுறை பெற்றுக்கொள்வதை உறுதி செய்யுமாறு ரொரண்டோ நகர மேயர் மற்றும் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா ஆகியோர் மாகாண அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாணத்தில் உள்ள தொழிலாளர்கள் கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் நோக்கில் விடுமுறைகளை அதிகம் பெறும் நிலையில் இது அவர்களின் பொருளாதாரத்தி்ல் தாக்கத்தைச் செலுத்துகிறது என ரொரண்டோ சுகாதார வாரியத்திற்கு அளித்த அறிக்கையில் டாக்டர் எலைன் டி வில்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே கோரிக்கையை ரொரண்டோ மேயர் ஜோன் டொரியும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக தனிப்பட்ட சுகாதார பராமரிப்பு தொழிலாளர்கள் அவர்களின் பணியிடங்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய சுகயீன விடுமுறையை உறுதி செய்வது அவசியம் என அவா்கள் கோரியுள்ளனர்.
தற்போது கனேடியர் தொழிலாளர்களில் 42 வீதம் பேர் மட்டுமே சுகயீன விடுமுறைக் கால ஊதியம் கிடைக்கிறது. குறைந்த ஊதியம் பெறும் முன்னணி சுகாதார தொழிலாளர்களில் 10 வீதம் பேர் மட்டுமே சுகயீன விடுமுறைக் காலத்தில் ஊதியம் பெறும் சலுகைகளை அனுபவிக்கின்றனர் என புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் பெரும் பகுதியை இழக்க நேர்கிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டாலும் கூட பொருளாதார சிக்கல்களைக் கருத்தில் கொண்டு வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொற்று நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என டொராண்டோ தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா தெரிவித்துள்ளார். .