இராஜங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற பணிக்குழாமினருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கமைவாக நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கு இன்று முதல் நாளை மறுதினம் வரை நாடாளுமன்ற வளாகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவசியமாயின் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றுறுதியான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்புடைய நாடாளுமன்ற பணிக்குழாமை சேர்ந்த 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேநேரம், முன்னதாக அமைச்சர் தயாசிறிய ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து அவருடனும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூக் ஹக்கீமுடனும் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை