அமெரிக்க நாடாளுமன்றக் கட்டத்துக்குள் கடந்த வாரம் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பெருமளவில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டநிலையில் அவர்களிடம் இருந்து தப்பி ஒன்றுகூடி ஒரே அறையில் மறைந்திருந்த எம்.பிக்கள் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த “வாட்சன் கோல்மன், பிரமிளா ஜெயபால் மற்றும் பிராட் ஷ்னீடர் ஆகியோரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலின்போது பல எம்.பிக்கள் நாடாளுமன்ற அறைகளுக்குள் ஒன்றாகப் பதுங்கியிருந்தனர். இதன்போது இவா்களில் பலா் முக கவசங்களையும் அணிந்திருக்கவில்லை.
இந்நிலையில் மேலும் பல எம்.பிக்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் எனவும் வைத்திய நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
உலகில் கொரோனா தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது அங்கு இதுவரை 22.6 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 367,000 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்றக் கலவரத்தின்போது அதிகளவு நெருக்கமாகக் கூடி ஒரே இடத்தில் தஞ்சமடைந்திருந்த அனைத்து எம்.பிக்களையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு பாராளுமன்ற தலைமை மருத்துவர் பிரையன் மோனஹான் கோரியிருந்தார்.
ஒரே அறையில் பல எம்.பிக்கள் மணிக்கணக்கில் சமூக இடைவெளியின்றி ஒன்றாகக் கூடியிருந்தனர். இதனால் ஒருவருக்கு தொற்று நோய் இருந்தால் கூட அனைவரும் பாதிக்கப்படும் சந்தர்ப்பம் அதிகம் எனவும் அவா் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா