இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் சமூகத்துக்குப் பரவ வாய்ப்பில்லை என்று தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இலங்கையின் கொரோனாத் தொற்று விடயங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
புதிய வகை கொரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டன எனவும், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் புதிய வகை கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இலங்கையர்களுடன் தொடர்புபடாத காரணத்தால், புதிய வகை கொரோனா சமூகப் பரவல் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த செப்டெம்பர் மாதம் இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளால் புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்த முடியுமான நிலை தொடர்கின்றது எனவும் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை