கனடாவிலும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ள கனேடியப் பிரதமர், தனது வாழ்த்துச் செய்தியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பு விவகாரத்தையும் சுட்டிக்காட்டி நினைவேந்தல் நல்லிணக்கத்துக்கு அடிப்படை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கனேடியப் பிரதமர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கனடாவில் உள்ள தமிழர்களுடன் உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் பண்டிகை அறுவடை திருநாளாகவும், புதிய வருடத்தின் தொடக்கமாகவும் உள்ளது.
பொங்கல் திருநாளில் சிறப்பான அறுவடைக்கு நன்றி கூறி குடும்பத்தினரும் நண்பர்களுடனும் இணைந்து பொங்கிப் பரிமாறி மகிழ்ச்சியடைகின்றனர்.
கோவிட்19 தொற்று நோய் கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால் இவ்வாண்டு கொண்டாட்டங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும்.
இந்த பொங்கல் பண்டிகையின் ஊடாக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் போன்றவற்றை மேலும் உயிர்ப்புடன் கடைப்பிடிப்பதற்கான புதிய வழிகளை மக்கள் கண்டுபிடிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்.
கனடாவில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாகவும் அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில், சிறந்த, அனைத்து வளங்களும் கொண்ட நாடாக கனடாவை உருவாக்குவதற்கு பாடுபட்ட தமிழ் கனடியர்களின் பங்களிப்புகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
இந்நேரத்தில் கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள துடிப்பான தமிழ் சமூகத்தின் வரலாறு மற்றும் வலிமை பற்றி மேலும் அறிந்துகொள்ளுமாறு அனைத்து கனடியர்களையும் ஊக்குவிக்கிறேன்.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழர்கள் சமீபத்தில் கனடாவில் ஒன்றிணைந்ததை நாங்கள் பார்த்தோம் .
நினைவு கூறுதல் என்பது சமூக நல்லிணக்கத்துக்கு அவசியம் என்பதை நான் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஆரோக்கியத்தையும் அமைதியையும் பெற எங்கள் குடும்பத்தின் சார்பாக, சோபியும் நானும் தைப்பொங்கள் திருநாளில் வாழ்த்துகிறோம் எனவும் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கனடா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம்