கொரோனா வைரஸ் தோற்றம் மற்றும் பரவல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நேற்று சீனா வந்தடைந்தது.
சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள விலங்குணவு சந்தையில் இருந்தே கொரோனா வைரஸ் முதல் முதலில் பரவியதாக சா்வதேச அளவில் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்று உலகெங்கும் பரவியது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தின.
இதையடுத்து இது குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாடுகளைச் சோ்ந்த 10 நிபுணர்கள் உள்ளடங்கிய குழுவை உலக சுகாதார அமைப்பு நியமித்தது.
ஆனால் கொரோனா வுஹான் நகரில் இருந்தே முதன்முதலில் பரவியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை சீனா மறுத்து வருகிறது. வேறு நாடுகளில் இருந்தும் வைரஸ் பரவியிருக்கலாம் என சீன அரசு தெரிவித்துவருகிறது.
அத்துடன், உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா வருவதைத் தவிர்க்கும் வகையில் கடுமையாக இழுத்தடிப்புக்களையும் சீனா செய்துவந்தது.
சீனாவில் இந்த இழுத்தடிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்தே நிபுணர் குழுவின் வருகைக்கு சீனா விசா வழங்கியது. அதனைத் தொடர்ந்து பல நாடுகளைச் சோ்ந்த நிபுணர்கள் சிங்கப்பூர் வந்து, அங்கிருந்து சீனாவின் வுஹான் நகரை வந்தடைந்தனர்.
இந்நிலையில் சீனா வந்துள்ள உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பின்னரே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என சீனாவின் நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் பெங்ஜிஜியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா எங்கு தோன்றியது? எப்படிப் பரவியது? என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது.எனினும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீன சுகாதார அதிகாரிகளுடன் கொரோனா பரவல் தொடர்பாக ஆலோசனை நடத்துவர். அதன் பின் வுஹான் நகர சந்தையில் ஆய்வு மேற்கொள்வர். நிபுணர் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் பெங் ஜிஜியன் குறிப்பிட்டுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா