தென்னாபிரிக்க நாடுகள் மற்றும் போர்த்துக்கல்லில் புதிய திரிபு கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கான பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களைத் தடை செய்யும் முடிவை பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அறிவித்தது.
அர்ஜென்டினா, பிரேசில், பொலிவியா, கேப் வெர்டே, சிலி, கொலம்பியா, ஈக்வடோர், பிரெஞ்ச் குயானா, குயானா, பனாமா, பராகுவே, யுரேயின் – பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா புதிய திரிவு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கான பயணங்கள் தடை செய்யப்படுவதாக பிரிட்டனின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை இன்று 15-ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தனது ருவிட்டரில் கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்திய பின்னர் இந்தப் பயணத் தடை அறிவித்தல் வெளியிடப்பட்டது.
பிரேசிலில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் புதிய திரிவு குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளதாக புதன்கிழமை பாராளுமன்றத்தின் கீழ் சபை எம்.பி.க்கள் மத்தியில் பேசிய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
பிரிட்டனில் ஏற்கனவே பரவி வரும் புதிய திரிபு வைரஸால் அந்நாடு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியர்களைப் பாதுகாக்க நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க முடியாதது எனவும் அவா் தெரிவித்தார்.
புதிய திரிபு கொரோனா வைரஸ் தடுப்பூசித் திறனைப் பாதிக்கிறதா ? என்பது குறித்த சந்தேகங்கள் உள்ளன.
புதிய திரிபு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு உள்ளதா? என்பது குறித்து நிபுணர்கள் மத்தியிலும் தெளிவில்லாத நிலையே தொடர்கிறது.
இந்நிலையிலேயே பல நாடுகளுக்கு பிரிட்டன் பயணத் தடைகளை விதித்துள்ளது.
பிரிட்டனில் நேற்று வியாழக்கிழமை 47,525 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இவா்களுடன் தற்போதுவரை 32 இலட்சத்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு கொரோனாவுக்கு 84,767 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலில் பின்னர் மூன்றாவது தடவையாக பிரிட்டன் அமுல் செய்துள்ள தேசிய அளவிலான சமூக முடக்கல் தற்போது அமுலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.