காலியில் இருந்து கொழும்பு சென்ற சொகுசுப் பேருந்தில் மறைத்துக் கடத்தப்பட்ட 18 கிலோ ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருள் இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்தப் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தார்.
காலியில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்தை இன்று காலை கொஸ்கொட பகுதியில் மறித்து கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கைது செய்யப்பட்ட 27 வயதான பேருந்து சாரதி கொழும்புக்கு வரும் வழியில் பல்வேறு இடங்களில் பேருந்தை நிறுத்தி போதைப் பொருளை விநியோகம் செய்தது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அண்மையில் இந்தியாவில் உயிரிழந்த பிரபல போதைப் பொருள் வர்த்தகரான அங்கொடை லொக்காவின் கீழ் இயங்கிய லாட்டி என்ற நபரின் தலைமையில் தற்போது போதைப் பொருள் கடத்தல் குழு ஒன்று செயற்பட்டு வருவதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜத் ரோஹண தெரிவித்துள்ளார்.