ஐக்கிய தேசியக் கட்சியில் பதவி மாற்றங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் இந்தப் புதிய நியமனங்கள் முன்னாள் பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன் அந்த நிகழ்வுக்கு ரவி கருணாநாயக்க உட்பட கட்சியின் பல முக்கியஸ்தர்கள் சமுகமளிக்கவில்லை.
அர்ஜுன ரணதுங்க, நவீன் திஸாநாயக்க போன்றோர் மேற்படி நியமனங்களில் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் எனவும் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அதேவேளை, ஐ.தே.கவின் புதிய தவிசாளராக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் புதிய செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாளராக ஏ. எஸ். மிஸ்பா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கிணங்க மீண்டுமொரு பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகின்றது.
நவீன், அர்ஜுன போன்றவர்கள் விரைவில் சஜித் அணியில் இணையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை