மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகள் நீண்டகாலமாக பரம்பரை பரம்பரையாக கால்நடை வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் மேய்ச்சல் தரையாக இருந்து வருகின்றது.
படுவான்கரை பகுதியில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது இங்குள்ள கால்நடைகள் இப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுகின்றது.
தற்போது விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அப்பகுதியில் ஊர்காவல் படையினர் காடுகளை வெட்டி காணிகளை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதனால் அப்பகுதி கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை வளர்ப்பதில் கஸ்டங்களை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.
நீண்டகாலமாக தாங்கள் இப்பகுதியில் கால்நடைகளை தமது முதாதையர்கள் முதல் மேய்த்துவரு வதாகவும் ஆனால் தற்போது தமது மேய்ச்சல் தரையினை சுற்றி முந்திரிகை வளர்ப்பு என கூறி வேலியமைக்கப்படுவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் முந்திரிகை செய்கையினை மேற்கொள்ளும் நடவடிக்கையினை ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் அது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அறிவிக்கப்படாத நிலையிலேயே முன்னெடுக்கப்படுவதாக தன்னிடம் தெரிவித்ததாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
வனஇலாகாவின் அனுமதியுடன் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அனைவரும் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு