இந்தோனேசியாவின் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ள நிலையில் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட யாவா தீவின் வான்பகுதியில் சுமார் 5.6 கிலோமீட்டர் உயரம் அளவுக்கு சாம்பல் மற்றும் புகை வெளியேறியுள்ளது.
எரிமலை வெடித்துள்ளபோதும் இதுவரை அங்கிருந்து மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவிக்கவில்லை. அத்துடன், மனிதர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலும் இதுவரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
எனினும் செமெரு மலைச் சரிவில் வாழும் கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய பேரிடர் முகாமைத்துவ மையம் எச்சரித்துள்ளது.
இந்தோனேசியா எரிமலை வளையம் (Ring of Fire) என்றழைக்கப்படும் பசிபிப் பகுதியில் அமைந்திருக்கிறது. புவியின் நில அடுக்குகள் மோதிக் கொள்வதால்இந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன.
செமெரு மலையில் இருக்கும் எரிமலை கடந்த டிசம்பர் 2020-இல் வெடித்தபோது இந்த மலையைச் சூழ உள்ள 550 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந்தோனேசியா கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து பல இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளைச் சந்தித்து வருகிறது.
கடந்த 10 ஆம் திகதி இந்தோனேசியாவின் போயிங்-737 மக்ஸ் ரக பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொருங்கியதில் 62 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில அதிர்வினால் கட்டங்கள் இடிந்து விழுந்தில் குறைந்தது 50 பேர் பலியாகினர்.
இந்நிலையில் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது மற்றொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.