ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் தலைநகர் காபூலில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் கடமைக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களது காரில் வைத்து இருவரையும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் சுட்டுக்கொன்றனர்.
இந்தத் தாக்குதலில் நீதிபதிகளின் சாரதி ஒருவரும் காயமடைந்தார்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுக்களும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அவர்கள் இதனை மறுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபன்களுக்கும் இடையே டோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் அதிகாரிகள் அங்கு தொடர்ச்சியாக இலக்குவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்