யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் காணி அளவீடு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
விருந்தினர் விடுதி ஒன்றினை அமைப்பதற்காக காணி அளவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மக்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று மண்டைதீவில் திரண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் அங்கு சென்று திரும்பிய நில அளவைத் திணைக்களத்தினர் யாழ்.மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரி உட்பட்ட பொலிஸாரின் துணையுடன் மீண்டும் காணி அளப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து மக்கள் வீதியில் அமர்ந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவத்தினை அடுத்து வேலணை பிரதேச செயலர் சோதிநாதன் அங்கு சென்று மக்களை சமாதானப்படுத்த முயன்றபோதிலும் மக்கள் அதற்கு உடன்படவில்லை.
இந்நிலையில் குறித்த நடவடிக்கையினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்த பிரதேச செயலர், காணி அமைச்சின் செயலாளருடன் இது தொடர்பில் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் நில அளவைத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் திரும்பியுள்ளனர்.
இதேவேளை இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சிகளின்பிரதிநிதிகளுடன் ஈபிடிபி கட்சியின் பிரதிநிதிகளும் பங்குகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்