அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளை மறுதினம் பதவியேற்கவுள்ள நிலையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள வொஷிங்டன் - நாடாளுமன்ற தலைமையகத்துக்குள் துப்பாக்கியுடன் ட்ரம்ப் ஆதரவாளரான 22 வயது இளைஞன் ஒருவர் நேற்று நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ பைடனின் பதவியேற்பு விழா நடக்கும் அரங்கம் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதிக்குள் நேற்று கார் ஒன்று நுழைய முற்பட்டது. இதன்போது அந்த காரை மறித்த பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அதிலிருந்தவர் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளதாக கூறினார். அதற்கான அழைப்பிதழையும் அந்த நபர் வழங்கினார்.
அந்த அழைப்பிதழை ஆராய்ந்த பொலிஸார், அது போலியானது எனக் கண்டுபிடித்தனர். பின்னர், அந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 509 தோட்டாக்கள் இருந்ததை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
கார் ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த 22 வயதான வெஸ்லி அலேன் பிலியர் என்பது தெரியவந்தது. ட்ரம்ப் தீவிர ஆதரவளரான அவர் முன்னர் இடம்பெற்ற கலவரம் தொடர்பான புகைப்படங்களையும் தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்களிலும் வன்முறை சம்பவங்கள் இடம்பெறலாம் என ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.