ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உறுப்பு நாடுகளை வலியுறுத்தும் வகையில் புலம்பெயர் தமிழ் இளையோர் சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையவழி கோரிக்கை மனுவில் இன்றுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்கான நீதி (Justice for Eelam) என்ற தலைப்பில் https://www.justiceforeelam.org இணையத்தளம் ஊடாக இந்த கையெழுத்து இயக்கம் கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழினப் படுகொலைகள் குறித்து சர்வதேசத்தின் மத்தியில் ஒருமித்த கருத்தொன்றை உருவாக்குவதும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சுயாதீனமான விசாரணைக்கு வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
இனப்படுகொலை அல்லது பிற துஷ்பிரயோகங்களுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பதன் மூலம் மீண்டும் ஒரு இனப்படுகொலை நிகழாமல் தடுக்கும் பொறிமுறையை நிறுவ விரைவாகச் செயற்படுமாறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை மற்றும் உறுப்பு நாடுகளிடம் இந்த மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.
போர் நிறைவுக்கு வந்து `12 ஆண்டுகள் ஆகின்றபோதும் இலங்கைப் படையினர் இழைத்த குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் எந்தவொரு உள்ளக விசாரணையும் குற்றமிழைத்தவர்களை காப்பாற்றுவதாகவே அமையும். குற்றவாளிகளே தாங்கள் குற்றமற்றவர்கள் என தீா்ப்பளிக்கும் நிலையே உருவாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் எங்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. இந்த பிரச்சாரம் ஈலத்திற்கு நீதிக்காக தமிழ் இளையோர் ஆரம்பித்துள்ள பயணத்தின் ஆரம்பம் மட்டுமே‘‘ என பிரச்சார அமைப்பாளர்களில் ஒருவரான அபிராமி லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.