யாழ். கொரோனா ஆய்வு கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூட பரிசோதனையில் மன்னார் நானாட்டான் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக இன்று பி.பகல் தெரிவித்திருந்த நிலையில் இன்றைய வட மாகாண தொற்று நிலவரம் தொடர்பில் தகவல் கேட்டதற்கிணங்க வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அருவிக்கு இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஐவருக்கும், பருத்தித்துறையில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இருந்து திரும்பிய நிலையில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களிடம் பெறப்பட்டிருந்த உயிரியல் மாதிரிகள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மேலும் தெரிவித்திருந்தார்.இதையடுத்து இன்றைய தினம் (ஜன-18) யாழ். கொரோனா ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வட மாகாணத்தில் ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார், பருத்தித்துறை, வடமராட்சி, வவுனியா