இன்றைய தினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா கடந்த 14ம் திகதி களனியில் திறந்து வைக்கப்பட்ட ரயர் தொழிற்சாலை திறப்பு விழாவில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர் குழாமுடன் பங்கேற்றிருந்த தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் (ஜன-18) மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலைகள், கல்வி சேவைகள்இ பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் அவரது குடும்பத்தினர் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பியல் நிஷாந்தவுடன் தொடர்புடைய அவரது உதவியாளர்கள் 10 பேர் முதல்கட்டமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொற்று உறுதியான பியல் நிஷாந்த அண்மையில் கலந்து கொண்ட நிகழ்வுகள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்ட போதே கடந்த 14ம் திகதி களனியில் இடம்பெற்ற ஆசியாவின் மிகப்பெரிய ரயர் உற்பத்தி ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றமை தெரியவந்துள்ளது.குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் குழாமில் இவரும் கலந்து கொண்டிருந்தமை அறியப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் சங்கைக்குரிய இத்தேபானே ஸ்ரீ தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்களான விமல் வீரவங்ச, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த அமரவீர, ரமேஷ் பதிரண, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, கனக ஹேரத், டீ.வீ. சானக, பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என குறித்த நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்திருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் இராஜாங்க அமைச்சருடன் தொடர்புபட்ட அடிப்படையில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை