வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட விவசாய செய்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக மூவாயிரத்து எண்ணூற்றி ஐம்பது (3850) ஏக்கர் விவசாய செய்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்தின் பிரதேச உத்தியோகத்தர்கள் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.
வாழைச்சேனை கமநல சேவை திணைக்கள பிரிவில் பதினையாயிரத்து ஐநூறு (15500) ஏக்கர் விவசாய செய்கை வெள்ளத்தினாலும், கபில நிற தட்டு (அரக்கொட்டி) நோய் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக சாராவெளி கட்டு, சுரிபோட்டான் வடிச்சல் கட்டு, கல்கேணி பாலம் இரண்டு பக்கம் வண்ட், கனையான் குழி கட்டு, ஒட்டுவெளி, பொருக்கண்ட குளம் ஆத்துக்கட்டு, பாம் வீதி பாலம், காரையடிப்பட்டி கட்டு, களுவாமடுக்கட்டு, பட்டியவெளி ஆத்துக் கட்;டு, சின்ன கோங்காலைப் பாலம், கிடச்சிமடு கட்டு, மினுமினுத்தவெளிக் கண்டம், வாய்க்கால் முறிவு போன்ற பதினான்கு விவசாய அணைக்கட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்தின் பிரதேச உத்தியோகத்தர்கள் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.
இதனால் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது விவசாய செய்கையை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், வெள்ள நீரின் காரணமாக வரம்பிலுள்ள மணல்கள் முழுவதும் வேளான்மையை மூடிக் காணப்படுகின்றது.
அத்தோடு வெள்ள நீர் சில வயல் நிலங்களில் தேங்கி காணப்படும் நிலையில் வேளான்மை கதிருடன் நீரில் வீழ்ந்து கிடப்பதால் வேளான்மை அழிந்த நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. மேலும் கபில நிற தட்டு (அறக்கொட்டி) நோய்த் தாக்கம் காரணமாக சில வேளான்மைச் செய்கை பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது.
இவ்வாறு வெள்ளம் மற்றும் கபில நிற தட்டு (அரக்கொட்டி) நோய் காரணமாக இம்முறை எதிர்பார்க்கப்படும் விளைச்சல் கிடைக்காது என்றும், பொருளாதாரத்திற்கு மத்தியில் விவசாய செய்கையில் ஈடுபட்ட நிலையில் பல சிரமங்களுடன் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பெரும்போக செய்கையின் மூலம் தொடர்ச்சியாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு