அமெரிக்க ஜனாதிபதியாக நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ள ஜோ பைடன் ஐரோப்பா மற்றும் பிரேசில் நாடுகளுக்கான பயணத் தடையை நீடிக்கும் அறிவிப்பை வெளியிடுவார் என பைடனின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பா மற்றும் பிரேசில் நாடுகளுக்கான பயணத் தடையை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அதனை பைடன் இரத்துச் செய்வார் எனவும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ஆரம்பம் முதல் ஐரோப்பிய, ஒன்றியம், பிரேசில் நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இந்தக் கட்டுப்பாடுகளை ஜனவரி- 26 முதல் நீக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த உத்தரவு வெளியான உடனேயே இந்தக் கட்டுப்பாடுகளை நீக்க பைடன் நிர்வாகம் விரும்பவில்லை என பைடன் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார். எங்கள் மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தார்.
தொற்றுநோய் மோசமடைந்துவருகிறது. அத்துடன், புதிய வகை திரிபு வைரஸ் உலகெங்கும் உருவாகிவருகிறது. இந்நிலையில் சர்வதேச பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நேரம் இதுவல்ல என அவர் மேலும் கூறினார்.