Wednesday 24th of April 2024 03:47:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டு. போதனா வைத்தியசாலையின் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுப்பு!

மட்டு. போதனா வைத்தியசாலையின் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுப்பு!


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காலை 10.00மணி தொடக்கம் 11.00மணி வரையில் இந்த போராட்டம் தாதியர்களினால் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைக்கு பாதிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டபோது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாக தாதியர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும் கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விஷேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரச தாதியர் சங்கம், பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன. பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நா.சசிகரன் உட்பட மாவட்ட தலைவர்கள்,தாதியர்கள் என பெருமளவானோர் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் 30க்கும் மேற்பட்ட சேவையாளர்கள் தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று முன்தினம்(17)திகதி தாதிய உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது மட்டக்களப்பு தாதியர்களுக்கு இங்கு இடமில்லை,காத்தான்குடி தாதியர்கள்தான் இங்கு இடமொதுக்கப்பட்டுள்ளது என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜாபீரினால் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து எமது கிழக்கு மாகாண இணைப்பாளர் சசிகரன் அவர்களிடம் தெரிவித்தபோது அவர் உயர்அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கல்லாறு வைத்தியசாலையி;ல் குறித்த தாதியை அனுமதிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்ததாக பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பி.புஸ்பராஜா தெரிவித்தார்.

நாங்கள் சேவைகள் செய்வதற்கு தயாராகயிருக்கின்றோம்.எங்களது தாதியர்களுக்கு தொற்று ஏற்படும்போது இந்த வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பராமரிக்கும் சாதாரண ஒரு இடத்தினை ஒதுக்கினாலே போதுமெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா பாதிப்புக்குள்ளான தாதி தற்போது கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாதிக்கப்படும் தாதியர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தனிப்பிரிவினை அமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் இதுவரையில் கிடைக்கவில்லையெனவும் தற்போது பெரியகல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்தார்.

கொரனா பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கான விசேட சலுகைகள் கோரப்பட்டுள்ளபோதிலும் என்ன சலுகையென குறிப்பிடவில்லையெனவும் அவ்வாறு தேவையான சலுகைகளை குறிப்பிடும்போது உரிய திணைக்களத்திற்கு அவை அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE