வடமாகாணத்தில் ஒரே நாளில் 52 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ள நாளாக நேற்றைய நாள் (ஜன-19) பதிவாகியுள்ளது.
வவுனியா நகரக் கொத்தணி தொடர்ந்தும் அதிகரிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்றைய தினமும் அக் கொத்தணியில் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதி வாசிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் ஒரு தொகுதி முடிவுகள் நேற்று காலை கிடைக்கபெற்றதன் அடிப்படையில் அவர்களில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனையில் மேலும் 25 பேருக்கு வவுனியா நகரக் கொத்தணியுடன் தொடர்புபட்டு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.அத்துடன் யாழ். மாநாகர சபை எல்லைக்குட்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பில் இருந்து வந்திருந்த காரணத்தினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபான்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மன்னாரைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் வவுனியா நகரக் கொத்தணியில் 45 பேருக்கும், யாழ். மாநகரசபை பகுதியில் ஐவருக்கும், மன்னாரைச் சேர்ந்த இருவருக்குமாக 52 பேருக்கு நேற்றைய நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணமாக பதிவாகியுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் 'சைட் சிட்டி' பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்திருந்தார்.
குறித்த மரணம் வட மாகாணத்தில் கொரோனாத் தொற்று காரணமாக ஏற்பட்ட 02ஆவது மரணமாகவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா