‘‘நாங்கள் எதனைச் செய்ய பதவிக்கு வந்தோமோ அதைச் செய்திருக்கிறோம்‘‘ என அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து இன்று வெளியேறும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அரசியல் வன்முறை என்பது அமெரிக்கர்களாகிய எங்களின் கௌரவத்துக்கு எதிரானது. இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் அவா் கூறினார்.
முன்னரே பதிவு செய்யப்பட்ட 20 நிமிடங்கள் கொண்ட தனது பிரியாவடை உரையை ட்ரம்ப் யூடியுப்பில் வெளியிட்டுள்ளார். அதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பரில் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில் ட்ரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பைடனிடம் தோல்வியடைந்தார். எனினும் அவர் தனது தோல்வியை இதுவரை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ட்ரம்பின் பதவிக்காலத்தின் கடைசி இரண்டு வாரங்கள் பயங்கர வன்முறையுடன் கழிந்தன. அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க காங்கிரஸ் கட்டத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வன்முறை அமெரிக்கர்களின் கௌரவத்தைப் பாதிக்கும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தனது பிரியாவிடை உரையில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் தாக்குதலில் ஈடுபட்டோர் தனது ஆதரவாளர்கள் என்பதை ட்ரம்ப் ஒருபோதும் குறிப்பிடவில்லை.
அமெரிக்க காங்கிரஸ் மீதான தாக்குதலை அடுத்து வன்முறையைத் தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ட்ரம்புக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பதவியில் இருந்து வெளியேறிய பின்னரும் செனட்டில் இது குறித்த விசாரணையை அவா் எதிர்கொள்வார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட முடியாதவாறு தடை விதிக்கபபடும்.
அமெரிக்க வரலாற்றில் இரண்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்ட முதல் ஜனாதிபதி என்ற அவப் பெயருடனேயே ட்ரம்ப் பிரியாவிடை பெறுகிறார்
இதேவேளை, ட்ரம்பின் ஜனாதிபதி பதவியின் இறுதிக் காலங்கள் வன்முறைகளுடன் கழிந்ததால் அங்கு பேரழிவை ஏற்படுத்தி கொரோனா தொற்று நோய் நெருக்கடி நிலை குறித்த செய்திகள் மறக்கடிக்கப்பட்டன.
கொரோனா தொற்று நோயால் 4 இலட்சத்தக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதுடன், 24 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொற்று நோயைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தவிறிவிட்டதாகவும் அவர் மீது கடும் விமர்சனங்கள் உள்ளன.
ஆனால் தனது நிர்வாகம் அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பியது என தனது பிரியாவிடை உரையில் ட்ரம்ப் கூறினார்.
எங்கள் நிகழ்ச்சி நிரல்கள் வலது, இடதுசாரிகள் அல்லது குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிகள் குறித்ததாக இருக்கவில்லை. முழு அமெரிக்கர்களின் நன்மைகளைக் குறிக்கோளாகக் கொண்டே நாங்கள் கொள்கைகளை வகுத்தோம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இதேவேளை, பதவியில் இருந்து வெளியேறும் ட்ரம்ப் இன்று உடனடியாகவே தனது சொந்த ஊரான புளோரிடாவுக்கு செல்கிறார். ஜனாதிபதி பைடன் பதவியேற்று விழாவிலும் பங்கேற்கப்போவதில்லை என அவர் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.