ரஷ்யாவின் இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியான எபிவாகொரோனா (EpiVacCorona) 100 வீதம் செயல்திறன் கொண்டது என ஆரம்ப கட்ட சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய நுகர்வோர் சுகாதார கண்காணிப்புக் குழுவான ரோஸ்போட்ரெப்நாட்ஸர் (Rospotrebnadzor) தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பெருமெடுப்பலான பரிசோதனை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் 18 முதல் 60 வயதுடைய 100 பேருக்கு சாத்தியமான தடுப்பூசி போடப்பட்டு தடு்ப்பூசியின் நோயெதிர்ப்பு திறன் மற்றும் பக்க விளைவுகள் குறித்து ஆராயப்பட்டது.
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி 92 வீதம் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி தற்போது அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு தனது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60 வீதமானவர்களுக்கு தடுப்பூசி போட முடியும் என ரஷ்ய அரசாங்கம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
எனினும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி மொஸ்கோவில் உடனடியாக கிடைத்தாலும், நாடு முழுவதும் இதன் விநியோகம் மிக மெதுவாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வாரம் முதல் ரஷ்யாவில் பரந்தளவான தடுப்பூசிப் பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்பூட்னிக் வி தடுப்பூசியுடன் பரந்தளவான தடுப்பூசித் திட்டங்களில் எபிவாகொரோனா தடுப்பூசியும் விரைவில் பயன்படுத்தப்படும் என ரஷ்யா துணைப் பிரதமர் டாடியானா கோலிகோவா தெரிவித்துள்ளார்.
உலகில் நான்காவது அதிக கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களைக் கொண்ட நாடாக ரஷ்யா உள்ளது. இங்கு இதுவரை 36 இலட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு இதுவரை 66,600-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்