மன்னார் மாவட்டத்தில் சடுதியாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படுபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட தொற்று 140 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட கொரோனாத் தொற்று நிலவரம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(22) மேலும் 23 பேர் புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 123 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரை 140 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஜனவரி மாதம் மன்னார் மாவட்டத்தில் 2849 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 7649 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் ஒவ்வொறு நூறு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் சமூகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற போது 3.9 வீத நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். இது மன்னார் மாவட்டத்தில் தொற்றின் நிலை அதிகரித்து காணப்படுவதை எடுத்துக்காட்டுகின்றது.
எனவே மக்கள் அவதானத்தோடு, பொறுப்போடும் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனாத் தொற்று காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மன்னார்