Wednesday 24th of April 2024 10:34:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின்  ஒரு அங்கமே நில அபகரிப்பு - விக்னேஸ்வரன்!

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு அங்கமே நில அபகரிப்பு - விக்னேஸ்வரன்!


எமக்கு எதிராக சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையாக நில அபகரிப்புஅமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர். சி.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார்.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முத ல் எமது நிலங்களை அபகரிப்பதற்கு பல்வேறு உபாயங்களை அரசாங்கங்கள் கையாண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்ற காணி அபகரிப்பு பற்றிய கருத்துப் பரிமாற்ற நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவா் தெரிவித்ததாவது,

நீர்ப்பாசன அபிவிருத்தி என்ற போர்வையில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப்பரம்பலில் செயற்கையான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளின் ஊடாக தமிழ் கிராமங்கள் பலவற்றில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அவை முற்றாக சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களாக இன்று மாற்றப்பட்டுவிட்டன.

30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றபோது வட மாகாணத்தின் ஏறத்தாழ முழுமையான பகுதியும் கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மையான பகுதிகளும் எமது இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் அம்பாறை, திருகோணமலையில் நடந்தது போல பெருமளவில் எமது நிலங்களை அரசாங்கங்களினால் அபகரிக்க முடியவில்லை. ஆனால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

ஒருபுறம் நீர்ப்பாசன திட்டங்கள் என்ற போர்வையில் நிலங்கள் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பறிக்கபப்டுகின்றன. மறுபுறம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் தன் வசம் வைத்துள்ளது. இதில், இராணுவ முகாம்கள் மட்டுமல்ல இராணுவ குடியிருப்புக்களும் உள்ளடங்கும். இவை தவிர, அரசாங்கம் எமது நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரச இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்திவருகின்றது. வன இலாகா, வன விலங்குகள் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவாலி அதிகாரசபை ஆகியவைவற்றுள் உள்ளடங்கும்.

எவ்வளவு வேகமாக நாம் எமது நிலங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை ஒரு உதாரணமாக சொல்கின்றேன். எமது மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரனின் புள்ளி விபரங்களின் படி முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 6, 21, 917. இதில், 4,20,300 ஏக்கர் அடர்ந்த காடு. ஆகவே, மக்கள் பயன்பாட்டுக்கு ,ருக்கும் நிலப்பரப்பு 201,617 ஏக்கர் ஆகும். இதில், ஆகக்குறைந்தது 80,000 ஏக்கர் நிலம் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் பயன்பாட்டுக்குரிய நிலபபரப்பில் ஏறத்தாழ 40வீத நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இந்த சிறிய உதாரணம் எம்மை சூழ்ந்துவரும் ஆபத்தை வெளிப்படுத்துகின்றது.

ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த 10 வருட காலப்பகுதியில், நில அபகரிப்புக்கு எதிராக நாம் உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானது. உள்நாட்டு சட்ட ரீதியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களை நாம் முழுமையான அளவில் மேற்கொள்ளவில்லை. அதேபோல, சர்வதேச சட்டம், சர்வதேச மனித உரிமை கட்டமைப்புக்கள், ஒப்பந்தங்கள், கோட்பாடுகள், போன்வற்றையும் நாம் முழுமையான அளவில் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இவற்றுக்கு மேலதிகமாக, சர்வதேச ஊடகங்களின் ஊடாக எமக்கு எதிரான நிலஅபகரிப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள், வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், தூதரகங்கள் போன்றவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட சிறப்பான lobbying ஆதரவு நாடி செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும்.

ஆனால், இவற்றையெல்லாம், நாம் மேற்கொள்வதற்கு எமக்கு எதிரான நில அபகரிப்புக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம். சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை நாம் முன்னெடுப்பது எமக்கு எதிரான நில அபகரிப்பு பற்றி சர்வதேச அளவில் நம்பகத்தன்மையானமுறையில் ஒரு விழிப்புணர்வையும் கவனத்தையும் ஏற்படுத்துவதற்கு உதவும். மறுபுறத்தில், அரசியல் ரீதியாக சர்வதேச அளவில் நாம் டழடிடிலiபெ ஆதரவு நாடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமன்றி உள்ளூரில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

ஆகவே, நில அபகரிப்புக்கு எதிரான எமது செயற்பாடுகளை நாம் வெறுமனே ஆர்ப்பாட்டங்ககள், நீதிமன்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நிறுத்திவிடாமல் மேற்குறிப்பிட்ட அறிவு, தகவல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான நடவடிக்கைளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பு பற்றி சர்வதேச ரீதியான விழிப்புணர்வு இருக்கிறது. இதற்கு காரணம், அவை பற்றிய முறையான ஆவணப்படுத்தல், ஆய்வுகள், பரப்புரைகள், ஊடக வெளியீடுகள் நடைபெற்றிருப்பதுதான்.

எமக்கு எதிராக என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எமக்கே சரியான புரிதல்கள் இன்றி இருக்கும் ஒரு துரதிஷ்ட்டமான நிலைமையே காணப்படுகின்றது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் நில அபகரிப்பு பற்றி ஆராய்வு செய்த யூத பேராசிரியரான OrenYiftachel என்பவர் அவற்றை ethnocratic land practices என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால், ஜனநாயகம், சட்டம் ஆகியவற்றின் போர்வையில், ஒரு நாட்டில் தனி ஒரு இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால் அதனை ethnocratic land practices என்று அவர் கூறுகிறார். இஸ்ரேலைபோல ஒரு ethnocratic நாடக இருப்பதற்கான அத்தனை பண்புகளும் இலங்கைக்கு இருப்பதாக அவர் கூறுகிறார். இதுபோன்ற விடயங்களை மேலும் ஆய்வு செய்து, அல்லது இந்த வாதத்தினை பலப்படுத்தும் நோக்கில் ஆதாரங்களை சேமித்து ஆவணப்படுத்தி எவ்வாறு எமக்கு எதிராக நில ஆக்கிரமிப்புக்கு நீதியை பெறுவதற்கு நம்பகத்தன்மையான ஆதிக்கம் நிறைந்த கருத்து வினைப்பாட்டை நாம் மேற்கொள்ளலாம் என்று சிந்தித்து விஞ்ஞான ரீதியாக நாம் செயற்படவேண்டும்.


Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE