தாய்வானை அச்சுறுத்தும் வகையில் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் கடந்த இரண்டு நாட்களாக தாய்வான் எல்லைகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலத்தின் பின்னர் இடம்பெற்ற இந்த நடவடிக்கை தாய்வானுக்கான பைடனின் ஆதரவை பரிசோதிக்கும் ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சீனாவின் போர்ப் பயிற்சியை ஒத்த நடவடிக்கையில் 12 போர் விமானங்கள் பங்கேற்றன.
தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் தாங்கள் இறைமை கொண்ட தன்னாட்சி நாடு என தாய்வான் கூறி வருகிறது.
சமீபத்திய மாதங்களில் தாய்வானின் தெற்குப் பகுதிக்கும், தென் சீனக் கடலில் உள்ள தாய்வானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாஸ் தீவுகளுக்கும் இடையில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளில் வழக்கமாக ஒன்று முதல் மூன்று உளவு விமானங்கள் , நீர்மூழ்கி கப்பல்கள் , போர் விமானங்கள் ஈடுபடுவது வழமையாக உள்ளதாக தாய்வான் தெரிவித்துள்ளது.
ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நடவடிக்கையில் 12 போர் விமானங்கள் பங்கேற்றன. இவை தாய்வான் வான்பரப்புக்குள் நுழைந்து வெளியேறின. அத்துடன், இரண்டு நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் மற்றும் ஒரு உளவு விமானம் ஆகியவையும் இந்த நடவடிக்கையில் பங்கேற்று தாய்வான் கடல் எல்லை வரை வந்து சென்றன என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன விமானங்கள் தாய்வான் எல்லைக்குள் நுழைந்தபோது தாய்வான் விமானப்படை இது குறித்து எச்சரிக்கை விடுத்தது. அத்துடன், சீன விமானங்களை கண்காணிக்க வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளையும் தாய்வான் நிறுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற சில நாட்களில் இடம்பெற்ற சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தாய்வானுடனான உறவை சோதிக்கும் ஒரு நடவடிக்கை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தாய்வானுடன் நெருக்கமான உறவுகளைப் பேணியது. தாய்வானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா அதிகரித்தது. அத்துடன், சீனாவின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தாய்வானுக்குச் சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து தாய்வானுடனான உறுதியான உறவுகள் தொடரும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.
தாய்வான் உட்பட அதன் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் போக்கை சீனா கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
தாய்வானுக்கு எதிரான இராணுவ, இராஜதந்திர மற்றும் பொருளாதார அழுத்தத்தை நிறுத்துமாறு பீஜிங்கை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாய்வான் பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் சீனா ஈடுபட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: சீனா, தாய்லாந்து